அழிவின் விளிம்பில் கொளப்பாக்கம் ஏரி பொதுப்பணி துறை அதிகாரிகள் அலட்சியம்
கொளப்பாக்கம்,அழிவின் விளிம்பில் உள்ள கொளப்பாக்கம் ஏரியை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீட்டெடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில் நான்கு வார்டுகள், கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ளன. கொளப்பாக்கம் கிராமத்திற்கு உட்பட்ட சர்வே எண் 74ல், வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில், 33.33 ஹெக்டேர் பரப்பில், கொளப்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. மழைக்காலத்தில் கீரப்பாக்கம், ஊனமாஞ்சேரி ஊராட்சிகளில் உள்ள ஏரிகள் நிரம்பினால், அவற்றின் உபரி நீர் கொளப்பாக்கம் ஏரியை வந்தடையும். இது தவிர, வண்டலுார் காப்புக்காடு வழியாகவும், கொளப்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து உண்டு. முன், இந்த ஏரியின் நீரை நம்பி, கொளப்பாக்கம் மற்றும் நெடுங்குன்றம் கிராமங்களில், 300க்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயம் நடந்து வந்தது. அதன் பின், நகரமயமாக்கல் காரணமாக, விவசாய தொழிலை பலர் கைவிட்டனர். விவசாய நிலங்களும் வீட்டு மனைகளாக மாறியதால், ஏரியின் தேவை சுருங்கியது. இதையடுத்து, ஏரியைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து, கரையோர பகுதிகள் ரியல் எஸ்டேட் முதலாளிகள் வசம் சென்றன. எஞ்சியுள்ள ஏரி, தற்போது பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக, கொளப்பாக்கம் ஏரியில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஏரி துார் வாரப்படாமல், சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ள நிலையில், தற்போதும் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. அழிவின் விளிம்பை நோக்கி பயணிக்கும் இந்த ஏரியை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீட்டெடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது. பொதுப்பணித்துறை மவுனம் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், வண்டலுார் -- கேளம்பாக்கம் சாலையில் இருந்த பல ஏரிகள், இன்று காணாமல் போய்விட்டன. அந்த ஏரிகள், தனியார் கல்லுாரிகளாகவும், குடியிருப்புகளாகவும், வீட்டு மனைகளாகவும் மாறிவிட்டன. தற்போது, கொளப்பாக்கம் ஏரியும் அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொளப்பாக்கம் ஏரியை கூறுபோட்டு விற்க முனைவதாலேயே, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, எவ்வித பராமரிப்பும் செய்யாமல், பொதுப்பணித்துறையும் மவுனம் காக்கிறது. பிரதான சாலையோரம் உள்ள இந்த ஏரியை துார்வாரி, சுற்றிலும் நடைபாதை அமைத்து, பசுமை பூங்கா உருவாக்க, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.