மதுராந்தகம் மருத்துவமனையில் புதிய ஜெனரேட்டர் பொருத்தம்
மதுராந்தகம்,:மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு, புதிதாக 'ஜெனரேட்டர்' பொருத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை சித்தாமூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம், மதுராந்தகம், ராமாபுரம், வேடந்தாங்கல் உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான மருத்துவ மனையாக உள்ளது . நாள்தோறும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் என, 1,300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டர் பழுதடைந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்து வந்தது. இதுகுறித்து, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரிடம், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ., சுந்தர் ஏற்பாட்டில், 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக ஜெனரேட்டர் வாங்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் மலர்விழி முன்னிலையில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் தலைமையில், ஜெனரேட்டர் திறக்கப்பட்டு, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், 24 மணி நேரமும், மின் இணைப்புடன் மருத்துவமனை வளாகம் செயல்படும்.