காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து புதுமாப்பிள்ளை தற்கொலை முயற்சி
கூடுவாஞ்சேரி கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் பெரிய தெருவில் வசிப்பவர் ஜெயகுமார், 35. இவருக்கு, கடந்த செப்டம்பரில் மதுராந்தகம் அருகில் உள்ள மெய்யூர் கிராமத்தை சேர்ந்த துர்காதேவி என்ற கவுசல்யா, 21,வுடன் திருமணம் நடந்தது.மாடம்பாக்கம் பகுதியில், இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், நேற்று அவரது மனைவி துர்காதேவி தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார்.அதில், அவர் தன்னை கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.அந்த மனு, கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாலினி, இது தொடர்பாக தம்பதியை அழைத்து, நேற்று மாலை விசாரித்தார்.அப்போது, இருதரப்பும் சமரச முயற்சிக்கு ஒத்துவராததால், வரதட்சணை தொடர்பான புகாரை விசாரிப்பதற்காக, மாவட்ட சமூக நலத்துறைக்கு புகாரை பரிந்துரை செய்வதாக, இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.அதை ஏற்றுக் கொண்ட தம்பதி இருவரும், காவல் நிலையத்தை விட்டு வெளியே சென்றனர். பின், மகளிர் காவல் நிலைய வளாகத்திற்குள் இருந்த ஜெயகுமார், மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை கொண்டு, தன்னைத் தானே கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.அதில் அவருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. உடனே, அவரை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.