பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் பயணியர் அவதி
செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட எல்லையம்மன் கோவில் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி, கடலுார் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு நின்று செல்கின்றன.ஓதியூர் ,முதலியார்குப்பம், நயினார்குப்பம், செய்யூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.தினசரி நுாற்றுக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், பயணியர் மதிய நேரத்தில் வெயிலில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.