ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றை இ - சேவை மையத்தில் தரலாம்
சென்னை, 'போக்குவரத்து ஓய்வூதியதாரர்கள், தங்களின் வாழ்நாள் சான்றை, பணிமனைகள், இ - சேவை மையங்களில் வழங்கலாம்' என, மாநகர போக்கவரத்து கழகம் அறிவித்துள்ளது.சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வூதிய விதிகளின்படி, ஓய்வூதியதாரர்கள், அவர்களின் வாரிசு தாரர்கள், ஆயுள் சான்றிதழை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். மாநகர போக்குவரத்து கழகத்தில், 14,800க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். அவர்கள் மூத்த குடிமக்கள் என்பதால், ஆயுள் சான்றிதழை அரசு கட்டுப்பாட்டின் கீழ், அந்தந்த பகுதியில் உள்ள இ - சேவை மையத்தில் சமர்ப்பிக்கலாம் என, ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி அறக்கட்டளை அறிவித்துள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரையிலான காலத்தில் ஓய்வூதியம் பெறுவோர், ஆயுள் சான்றிதழை இ - சேவை மையத்திலோ, பணிமனைகளில் நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம்.இ - சேவை மையத்தில் சமர்ப்பிக்கும்போது, ஓய்வூதிய ஆணை படிவம், வங்கி புத்தகம், ஆதார் அட்டை, புகைப்படம், மொபைல்போன் எண் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.தலைமை அலுவலகம், பட்டுலாஸ்சாலை தொழிற்கூடம், கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகம், கே.கே.நகர், குரோம்பேட்டை, மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, பெசன்ட் நகர், அடையார், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கிளாம்பாக்கம் ஆகிய பணிமனைகளிலும், நேரில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.விடுபட்டவர்கள் தலைமை அலுவலகத்தை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, 044- - 2345 5801- என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.