வன்னியர் சங்க மாநாடு நிபந்தனை ஏற்பதாக பா.ம.க., தரப்பு தகவல்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிராமத்தில், 12 ஆண்டுகளுக்குப் பின், சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, வரும் 11ம் தேதி நடக்கிறது.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், இந்த மாநாடு குறித்து, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் தலைமையில், நேற்று கூட்டம் நடந்தது.இதில், டி.ஐ.ஜி., கிஷா மிட்டல், எஸ்.பி., சாய் பிரணித், பா.ம.க., கவுரவ தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம், பா.ம.க., மாவட்ட செயலர் காயர் ஏழுமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதன் பின், எம்.எல்.ஏ., ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:வன்னியர் சங்க மாநாட்டிற்கு காவல் துறை விதித்த அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கிறோம். மாநாட்டிற்கு வரும் வாகனங்கள், அந்தந்த காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, அனுமதி பெற்றுவர வேண்டும்.மாநாடு இரவு 10:00 மணிக்கு முடிக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். தமிழக அரசு, மாநாட்டிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.