சாலை நடுவே பள்ளம் வாகன ஓட்டிகள் அச்சம்
மறைமலைநகர்: சிங்கபெருமாள் கோவில் -அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில்,செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தங்களின் அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில், தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகின்றன. சிதிலமடைந்த இடங்களில் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டு உள்ளதால் அவை தற்போது பெயர்ந்து மீண்டும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. பள்ளங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் பள்ளி, மருத்துவமனைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.