சூணாம்பேடு பஜார் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அவசியம்
செய்யூர்:சூணாம்பேடு பஜார் பகுதியில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்யூர் அருகே, சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், மக்கள் அதிகமாக வசிக்கும் பெருமாள் கோவில் தெரு, ஜமீன் தெரு, அங்காளம்மன் கோவில் தெருவில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மழைக்காலத்தில் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தெருக்களில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டுமென, பல ஆண்டுகளாக கிராமத்தினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது வரை கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.