தென்மேல்பாக்கத்தில் நிழற்குடை பஸ் பயணியர் வேண்டுகோள்
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம் தென்மேல்பாக்கம் ஊராட்சியில் தென்மேல்பாக்கம், அம்பேத்கர் நகர், காச்சேரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், 850க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.கிராம மக்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகளுக்கு சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த பகுதியிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பயணியர் மழை மற்றும் வெயிலில் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:தென்மேல்பாக்கத்தில் உள்ள மூன்று பேருந்து நிறுத்தத்திலும் நிழற்குடை இல்லாததால், மர நிழலில் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.மழைக்காலங்களில் இடி, மின்னலடிக்கும் நேரங்களில், மிகுந்த அச்சமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்த பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.