பராமரிப்பற்ற நீர்த்தேக்க தொட்டி இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
அச்சிறுபாக்கம்:அனந்தமங்கலத்தில், பராமரிப்பின்றி உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்ட வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது அனந்தமங்கலம் ஊராட்சி. இங்குள்ள குளக்கரை பகுதியில் மக்களின் குடிநீர் தேவைக்காக, 25 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றி, குழாய்கள் வாயிலாக கிராமத்தினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது, இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி துாண்களின் அடிப்பகுதியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, உறுதித் தன்மை இழந்து உள்ளது. பராமரிப்பின்றி உள்ளதால், இதிலிருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக, கிராமத்தினர் அச்சமடைந்துள்ளனர். எனவே, பராமரிப்பின்றி, வலுவிழந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி, மீண்டும் அதே இடத்தில் புதிதாக கட்ட வேண்டுமென, கிராமத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.