சாலையிலுள்ள இரும்பு தடுப்புகள் மாயமாவதை தடுக்க கோரிக்கை
திருப்போரூர்;சாலையில் வைக்கப்படும் இரும்பு தடுப்புகள் மாயமாவதை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., துாரம் உள்ளது. இச்சாலை இடையே மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும், சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் சாலை வளைவு பகுதிகள், சாலையோரம் பள்ளம் மற்றும் கிணறுகள் உள்ள பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் செம்பாக்கம், கொட்டமேடு, கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த சாலையோர இரும்பு தடுப்புகள், நாளுக்கு நாள் மாயமாகி வருகின்றன. இவற்றை, மர்ம நபர்கள் திருடிச் சென்று, கடைகளில் விற்பனை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது, சாலையோரம் இரும்பு தடுப்புகள் குறைந்து, விபத்து ஏற்படும் சூழல் உருவாகிஉள்ளது. எனவே, தடுப்பு இல்லாத இடங்களில், நெடுஞ்சாலைத் துறையினர் மீண்டும் தடுப்பு அமைக்கவும், அவை மாயமாகாமல் இருக்க போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.