உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொத்தேரி பகுதியில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

பொத்தேரி பகுதியில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை

மறைமலை நகர்:பொத்தேரி பகுதியில் ஜி.எஸ்.டி., சாலை இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியில் 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தனியார் பல்கலைக்கழகம், தனியார் மருத்துவமனைகள் உள்ளன. சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த வழியாக செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இணைப்பு சாலையில், பூமிக்கு அடியில் தனியார் கேபிள் இணைப்புகள் செல்கின்றன. இந்த இணைப்புகளை பராமரிக்கும் பணி சில மாதங்களுக்கு முன், இந்த சாலையில் நடந்தது. இதற்காக இணைப்பு சாலையில் 5 அடி அகலத்தில் பெரிய பள்ளம் பொக்லைன் இயந்திரம் வாயிலாக தோண்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், பள்ளம் சிமென்ட் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டது. தற்போது கான்கிரீட் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர். இந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !