கடப்பாக்கம் கடற்கரை பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை
செய்யூர்: செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பம் பகுதியில் மீனவர்கள் படகு நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு கடப்பாக்கம் குப்பம், ஆலம்பரை குப்பம் ஊத்துக்காட்டு அம்மன் பகுதி மற்றும் ஆலம்பரை குப்பம் தண்டுமாரியம்மன் ஆகிய பகுதியை சேர்ந்த மீனவர்கள், நாட்டு படகுகளை இங்கு நிறுத்துகின்றனர். மேலும் கடலில் பிடிக்கப்படும் மீன்களை தரம்பிரித்தல், வலை பின்னுதல், ஏலம் விடுதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால் தினமும் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் மக்கள் என, நுாற்றுக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர். கடப்பாக்கம் கடற்கரையில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால், மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆண்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள் மற்றும் சுற்றுலாப்பயணியர் இயற்கை உபாதை கழிக்க சிரமப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், கடப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.