குறுகலான செங்குன்றம் சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
மறைமலை நகர்: குறுகலாக உள்ள செங்குன்றம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலை, 5 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை ஒட்டியுள்ள செங்குன்றம், இந்திரா நகர், அலமேலுமங்காபுரம், நரசிங்கபுரம் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட வீடுகள், இரண்டு தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன. நாளுக்கு நாள் இந்த பகுதியில் வீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், சாலை குறுகலாகவும், வளைவுகள் அதிகமாகவும் உள்ளதால், முன்னால் செல்லும் வாகனங்களை கடந்து செல்வது சவாலாக உள்ளது. அடிக்கடி விபத்து மற்றும் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே இந்த சாலையின் இருபுறமும் தலா 5 அடி அகலம் விரிவாக்கம் செய்ய வேண்டும். இதனால், வாகனங்கள் நெரிசலின்றி செல்ல முடியும். அத்துடன் விபத்துகளையும் தடுக்க முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.