கலை அரங்கம் அமைக்க மதுார்வாசிகள் கோரிக்கை
அச்சிறுபாக்கம் :அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் மதுார் ஊராட்சி அமைந்துள்ளது. இப்பகுதியில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பாஞ்சாலி அம்மன் கோவில், சப்த கன்னியர், முனீஸ்வரன் கோவில், அய்யனாரப்பன் கோவில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்கள் அனைத்தும் ஒரே பகுதியில் உள்ளன.இதனால், விழா காலங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அரங்கம் இல்லாததால், அப்பகுதியில் தெருக்கூத்து உள்ளிட்ட கலைகள் நடத்த முடியாமல் அப்பகுதியினர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், கோடை மற்றும் மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இது தொடர்பாக, அப்பகுதியினர் ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மதுார் பகுதியில் கலை அரங்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.