ஊரக வளர்ச்சித்துறை சங்கங்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர், ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு, செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், மாநில துணை பொதுச்செயலர் குமார் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயலர் துரைராஜ், மாவட்ட பொருளாளர் அரிகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: துாய்மை பணியாளர்களின் மாதாந்திர ஊதியத்தை 10,000 ரூபாயாக உயர்த்தி, ஊராட்சி மூலமாக ஊதியத்தை வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களை, தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து, ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். இவ்வாறு, கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.