உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை மாவட்ட மருத்துவமனை டிசம்பருக்குள் திறக்க எதிர்பார்ப்பு

செங்கை மாவட்ட மருத்துவமனை டிசம்பருக்குள் திறக்க எதிர்பார்ப்பு

குரோம்பேட்டை:தாம்பரம் சானடோரியத்தில், 110 கோடி ரூபாய் செலவில், மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. தென்சென்னையில் உள்ள ஒரே அரசு மருத்துவமனை இதுவாகும்.இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்ட போது, குரோம்பேட்டை தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.மாவட்ட மருத்துவமனையாக மாற்றினால், இதை சுற்றியுள்ள பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லுார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களை சேர்ந்த மக்கள் பயனடைவர் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.இதையடுத்து, குரோம்பேட்டை மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், 2021 அக்டோபரில் அனுமதி வழங்கியது. தொடர்ந்து, இம்மருத்துவமனையை நவீனமயமாக்க, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.கடந்த 2023 பிப்ரவரி 28ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறையின் தடையில்லா சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், 2023 ஆகஸ்ட் மாதம் பணிகள் துவங்கின.பணிகள் துவங்கி, ஐந்து மாதங்கள் ஆன நிலையில், தற்போது, 30 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தொடர்ந்து பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள், மாவட்ட மருத்துவமனை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குரோம்பேட்டை மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக உயர்த்த வேண்டும் என, சட்டசபையில் தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். இதன் காரணமாக, 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சானடோரியத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இம்மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்தால், நான்கு தாலுகாக்களை சேர்ந்த மக்கள் பயனடைவர். மருத்துவமனையை முதல்வர் திறந்து வைப்பார்.- இ.கருணாநிதி,தி.மு.க., - எம்.எல்.ஏ.,பல்லாவரம்.

 500 படுக்கை ↓தனியாக ஓ.பி., பிளாக் ↓எம்.ஆர்.ஐ., 'ஸ்கேன்' பார்க்கிங் பகுதி ↓கண், மூக்கு, காது, தொண்டை அறுவை சிகிச்சை அரங்கு தீக்காயம் வார்டு ↓தோல், எலும்பு முறிவு, மனநலம் பிரிவு ↓பொது அறுவை சிகிச்சை பிரிவு ↓ஆயுர்வேத சிகிச்சை பிரிவு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ