செங்கை - வாலாஜாபாத் சாலையில் நிழற்குடை பணிகள் துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரையிலான நெடுஞ்சாலையில் நிழற்குடை அமைக்கும் பணிகள் துவங்கி உள்ளன. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை குறுகியதாக இருந்ததால், அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையை, 448 கோடி ரூபாயில் மேம்படுத்த, 2018ல் நெடுஞ்சாலைத் துறை நிதி ஒதுக்கியது. செங்கல்பட்டில் இருந்து வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமம் வரை, நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் துவங்கி, நடந்து வருகின்றன. வெண்குடி முதல் காஞ்சிபுரம் வரை, 13 கி.மீ., இரு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. இதில், வெண்குடி - காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு - வாலாஜாபாத் வரை, சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன. தற்போது, பயணியர் நிழற்குடை மற்றும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் இப்பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.