உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட குறைந்ததால் அதிர்ச்சி

செங்கை துவக்க பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்தாண்டை விட குறைந்ததால் அதிர்ச்சி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு துவக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் கடந்தாண்டு, 7,227 மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்தாண்டு, 6,073 மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் துவக்கப் பள்ளிகள் 481, அரசு உதவிபெறும் துவக்கப் பள்ளிகள் 83, நடுநிலைப் பள்ளிகள் 189, அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள் 27 என, மொத்தம் 782 பள்ளிகள் உள்ளன.அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், சிட்லப்பாக்கம் ஆகிய கல்வி வட்டாரங்கள் உள்ளன.இந்த வட்டாரங்களில் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி நிர்வாகங்கள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. அதன்படி இந்தாண்டும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்தாண்டு, ஒன்றாம் வகுப்பில், 7,227 மாணவர்கள் சேர்ந்தனர்.ஆனால் இந்தாண்டு, எட்டு வட்டாரங்களில் துவக்கப் பள்ளியில், மார்ச் மாதத்தில் இருந்து, கடந்த 6ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெற்றதில், ஒன்றாம் வகுப்பில், 6,073 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.மேலும், எல்.கே.ஜி., வகுப்பில், 458 மாணவர்களும், யு.கே.ஜி.,யில் 179 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இது, கல்வித்துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னுரிமை கிடைக்கும்செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு பள்ளிகளில் படித்தால், அரசின் சலுகைகள், அரசு கல்லுாரிகளில் முன்னுரிமை கிடைக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களை அதிகமாக சேர்க்க ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்து வருகிறோம். செங்கல்பட்டு மாவட்டத்தில், தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க வேண்டுமென்ற ஆசையில், பெற்றோர்கள் முதலில் அப்பள்ளிகளில் சேர்க்கின்றனர். அதன் பின், அங்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கின்றனர். இதை செலுத்த முடியாத பெற்றோர்கள், மீண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கும் நிலை உள்ளது. இதனால், ஆரம்பத்திலேயே கிராமங்களில் உள்ள பள்ளிகளிலேயே மாணவர்களை படிக்க வைக்க, பெற்றோர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ