உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சார்-பதிவாளர் அலுவலகம் மறைமலை நகரில் எதிர்பார்ப்பு

சார்-பதிவாளர் அலுவலகம் மறைமலை நகரில் எதிர்பார்ப்பு

மறைமலை நகர், - செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மறைமலை நகர், பொத்தேரி, சிங்க பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள், நிலங்களின் மதிப்பு, கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக, ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த பகுதியில், சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய, செங்கல்பட்டில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகம் செல்லும் நிலை உள்ளது.செங்கல்பட்டு சார் - பதிவாளர் அலுவலகத்தில், தற்போது தினமும் 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு, சராசரியாக 150 டோக்கன்களுக்கு பதிவுகள் நடைபெற்று வருகின்றன.முகூர்த்த நாட்களில், 300 டோக்கன்கள் வழங்கப்பட்டு, 250 பதிவுகள் நடை பெறுகின்றன. தட்கல் முறையில், கூடுதலாக 10 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.இது குறித்து, ரியல் எஸ்டேட் முகவர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு சார் - பதிவாளர் அலுவலகத்தில், 80 கிராமங்களை சேர்ந்தவர்களின் சொத்து, திருமணம், சங்க பதிவுகள், பார்ட்னர்ஷிப் பதிவுகள் போன்ற பல்வேறு பதிவுகள் நடைபெற்று வருகின்றன.நுகர்வோருக்கு சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில், மறைமலை நகர் பகுதியில் சார் - பதிவாளர் அலுவலகம் திறக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வருகிறது.இதற்காக, மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரில், இடம் தேர்வு செய்யப்பட்டது. பின், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே, தமிழக அரசு மறைமலை நகரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை