சாலை அமைக்க 2 கிராம மக்களிடையே பேச்சு
செய்யூர்:இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் சின்னகுப்பம், தழுதாளிகுப்பம் என, இரு கிராமத்திற்கும் இடையே உள்ள சாலை, பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதையடுத்து, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 30 லட்சம் ரூபாயில் சாலையை சீரமைக்கும் பணிகள் துவங்கிய போது, தழுதாளிகுப்பம் கிராமத்தினர் பணியை நிறுத்தினர். இதனால், இரு மீனவ கிராமங்கள் இடையே மோதல் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு கிராமத்தைச் சேர்ந்த மக்களிடம், வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யூர் வட்டாட்சியர் கணேசன் தலைமையில், நேற்று பேச்சு நடந்தது. அப்போது, இரு தரப்பினரும் தங்களது கருத்தை முன்வைத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, சாலை அமைப்பது குறித்து முடிவு தெரிவிக்கப்படும் என, வட்டாட்சியர் கணேசன் வலியுறுத்தினார்.