உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் - மானாமதி சாலையில் வெள்ளை கோடு அமைக்காததால் பீதி

திருப்போரூர் - மானாமதி சாலையில் வெள்ளை கோடு அமைக்காததால் பீதி

திருப்போரூர்:திருப்போரூர் - மானாமதி சாலையில், வெள்ளைக் கோடு அமைக்காததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.திருப்போரூர் -- மானாமதி இடையே சிறுதாவூர், ஆமூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இதில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள், அங்குள்ள பள்ளங்களால் அவ்வப்போது விபத்தில் சிக்கின.மழைக்காலத்தின் போது, சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கும் மழை நீரால், சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டன. பள்ளங்கள் எங்கு உள்ளன என்று தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைந்தனர்.வனத்துறையினர் எதிர்ப்பால், இந்த சாலை சீரமைப்பு பணி கிடப்பில் இருந்தது. வனப்பகுதி சாலைகளை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் அனைத்து துறைகளுக்கும் கோரிக்கை வைத்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தொடர்ந்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சாலையை சீரமைக்க வனத்துறை அனுமதி வழங்கியது.இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை மூலம், 28 கோடி ரூபாய் மதிப்பில், திருப்போரூர் முதல் மானாமதி வரை, 10 கி.மீ., புதிய சாலை அமைக்க முடிவானது.தொடர்ந்து சாலை பள்ளம், மேடுகள் சமன் செய்தல், சாலையோர முட்செடிகள் அகற்றி அகலப்படுத்துதல், தார் போடுதல் என அனைத்து பணிகள் முடிந்து, தற்போது புதிய சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், சாலையின் நடுவே, வெள்ளை கோடு அமைக்காததால், வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.அத்துடன், விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. ஒரே நேரத்தில் வாகனங்கள் எதிரெதிரே செல்லும் போது, சாலை நடுவே வெள்ளை குறியீடு கோடு இல்லாததால், வாகன ஓட்டிகள் திணறி செல்கின்றனர். எனவே, போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், வாகன விபத்துகளை தவிர்க்க, சாலையின் நடுவே வெள்ளை கோடு அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி