பர்னிச்சர் கடையில் தகராறு அனகாபுத்துாரில் மூவர் கைது
அனகாபுத்துார், அனகாபுத்துாரில், பர்னிச்சர் கடையில் தகராறில் ஈடுபட்டு, கடை ஊழியர்களை தாக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். அனகாபுத்துார், காமராஜர் சாலையில் உள்ள பர்னிச்சர் கடையில், அனகாபுத்துாரை சேர்ந்த பரணிதரன், 42, என்பவர் டேபிள் செய்ய, 'ஆர்டர்' கொடுத்துள்ளார். ஆனால், தேக்கு மரத்திற்கு பதிலாக, சாதாரண மரத்தில் டேபிள் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, அந்த கடைக்கு சென்ற பரணிதரன், இது குறித்து, கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். அப்போது, பரணிதரனுக்கும், கடையில் இருந்த ஊழியர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி, ஒருவரை ஒருவர் கைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது ஆத்திரமடைந்த பரணிதரன், அங்கிருந்து சென்று, தனது ஏரியாவை சேர்ந்த 10 பேரை அழைத்து வந்து, மீண்டும் கடையில் தகராறு செய்துள்ளார். அப்போது, தகராறு முற்றி, இரு தரப்பினரும் கட்டையால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில், இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து, சங்கர் நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில், காயமடைந்த கடை ஊழியர்களான வட மாநிலத்தை சேர்ந்த மூன்று பேர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ராஜேஷ், 50, காளிதாஸ், 45, ரமேஷ், 46, ஆகிய மூன்று பேரை, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.