உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சூணாம்பேடில் வணிக வளாகம் வியாபாரிகள் எதிர்பார்ப்பு

 சூணாம்பேடில் வணிக வளாகம் வியாபாரிகள் எதிர்பார்ப்பு

சூணாம்பேடு, சூணாம்பேடு ஊராட்சி சார்பாக, பஜார் பகுதியில் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பஜார் பகுதியில், ஊராட்சிக்குச் சொந்தமான 18 கடைகள் இருந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், முறையான பராமரிப்பின்றி, இந்த கடைகள் பழுதடைந்து இருந்தன. மேலும் கடைகள் சாலை ஓரத்தில் இருப்பதால், பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் பழைய கடைகளை அகற்றி விட்டு, புதிய கடைகள் அமைக்க ஊராட்சி மன்றம் சார்பாக முடிவு செய்யப்பட்டு, அனைத்து கடைகளும் காலி செய்யப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு டிச., 9ம் தேதி, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் கூடிய, புதிய வணிக வளாக கட்டடம் அமைப்பதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை புதிய வணிக வளாக கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளதால், பழைய 18 கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள், புதிய கடைகள் வாடகைக்கு கிடைக்காமலும், தனிநபர்களிடம் அதிக வாடகை செலுத்தியும் கடைகள் நடத்தி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், சூணாம்பேடு பஜார் பகுதியில் ஊராட்சி சார்பாக புதிய வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை