ஹெராயின் வைத்திருந்த திரிபுரா வாலிபர் கைது
சென்னை: மயிலாப்பூரில், ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்த, திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூர், சாந்தோம் 'சர்ச்' பின்புறம், நேற்று காலை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வட மாநில வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 35 கிராம் எடையிலான, 51 ஹெராயின் குப்பிகளை அவர் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் மேற்கு திரிபுராவைச் சேர்ந்த குத்துஸ் மியா, 25, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், 51 ஹெராயின் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.