உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லையில் விடுமுறை நாட்கள் சுற்றுலாவில் நெரிசலில் திணறி பயணியர்... அவதி!

மாமல்லையில் விடுமுறை நாட்கள் சுற்றுலாவில் நெரிசலில் திணறி பயணியர்... அவதி!

மாமல்லபுரம்:போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பயணியர் திணறி அவதிக்குள்ளாகின்றனர்.சென்னை மாநகரை ஒட்டியுள்ள மாமல்லபுரம், பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்கள் அமைந்துள்ள, சர்வதேச சுற்றுலா இடமாக விளங்குகிறது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு, குடவரைகள் ஆகியவற்றை காண, உள்நாடு, சர்வதேச பயணியர் திரள்கின்றனர்.குறிப்பாக, சென்னை மற்றும் சுற்றுபுற பகுதியினர், வார இறுதி நாட்களில், ஒருநாள் சுற்றுலா பொழுதுபோக்கிற்காக படையெடுக்கின்றனர். அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களிலும், சென்னை பகுதி பயணியர் திரண்டு, சுற்றுலா களைகட்டுகிறது. பெரும்பாலானோர் கார் உள்ளிட்ட தனி வாகனத்தில் வருகின்றனர். ஒரேநாளில் அதிகளவில் வாகனங்கள் குவிகின்றன. நெரிசலின்றி செல்வதற்கேற்ப விசாலமான சாலைகள் இல்லை.இங்கு, போக்குவரத்திற்காக, கிழக்கு ராஜ வீதி, கடற்கரை சாலை, பழைய சிற்பக்கல்லுாரி சாலை, தென்மாடவீதி, ஐந்து ரதங்கள் வீதி, கலங்கரைவிளக்க சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, பகிங்ஹாம் கால்வாய்க்கரை சாலை ஆகியவை உள்ளன. உள்ளூர் வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், இச்சாலைகளில் செல்கின்றன. தற்கால போக்குவரத்து சூழலுக்கேற்ப, விசாலமான சாலைகளாக இல்லை. நீண்டகாலத்திற்கு முன் அமைக்கப்பட்ட 7 மீ., அகல குறுகியவையாகவே உள்ளன. சாலையோர நிரந்தர கடைகள் சாலையையும் ஆக்கிரமித்துள்ளன. நடைபாதை வியாபாரம், சாலையை ஆக்கிரமித்தே நடக்கிறது.சுற்றுலா களைகட்டும் நாட்களில், அனைத்து சாலையிலுமே, வாகனங்கள் செல்ல இயலாத அவலம் உள்ளது. எதிரெதிர் திசையில் செல்ல முடியவில்லை. காலையிலே வாகனங்கள் படையெடுக்கும் நிலையில், கடும் நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் உள்ளே வரவோ, உள்ளிருந்து வெளியேறவோ இயலாமல், பல மணி நேரம் போக்குவரத்து முடங்குகிறது. பாதசாரி பயணியர் மூச்சுத் திணறுகின்றனர். மாலையில், ஒரேநேரத்தில், அதிகளவில் வாகனங்கள் வெளியேற முயன்று, இரவு 8:00 மணி கடந்தும் நெரிசல் நீடிக்கிறது. மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் செல்ல முடியவில்லை.தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறையாக உள்ளதால், தினசரி பயணியர் குவிகின்றனர். இதுமட்டுமின்றி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் வழிபட குவியும் கர்நாடக, ஆந்திர பக்தர்கள், கடலில் நீராட கருதி, இங்கும் திரள்கின்றனர். சுற்றுலா வாகனங்கள், பக்தர்களின் பஸ்கள் என, தினசரி நுாற்றுக்கான வாகனங்கள் குவிகின்றன. அவற்றை நிறுத்த, முறையான வாகன நிறுத்துமிடம் இல்லாமல், சாலையில் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் மேலும் அதிகரித்து, இப்பகுதி இயல்புவாழ்க்கையும் முடங்குகிறது.தைப்பூச உற்சவம் வரை, மேல்மருவத்துார் பக்தர்கள் திரள்வர் என்பதால், நெரிசலும் நீடிக்கும். ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய நாட்களிலும், வாகனங்கள் படையெடுக்கும். நெரிசலை தவிர்க்க, அனைத்து சுற்றுலா வாகனங்களையும், வெளியிடத்தில் நிறுத்தி, பயணியரை மட்டும் நகர்ப் பகுதிக்குள் அனுமதிக்க, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:மேல்மருவத்துார் செல்லும் வெளிமாநில பக்தர்கள், இங்கும் நுாற்றுக்கணக்கான பஸ்களில் வருகின்றனர். பஸ்களை, சுற்றுலா வாகனங்களை நிறுத்த இடமில்லை. சாலையில் நிறுத்தி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பூஞ்சேரி, அரசு மருத்துவமனை அருகில், பல ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், மாவட்ட நிர்வாகம், சுற்றுலா வாகனங்களை அங்கு நிறுத்தியது. அங்கிருந்து, நகருக்குள் பயணியர் செல்ல, தலா 10 ரூபாய் கட்டணத்தில், பிரத்யேக வேன்கள் இயக்கியது. அதேபோன்று தற்போதும் ஏற்பாடு செய்தால், நெரிசலை முற்றிலும் தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை