அரசு பஸ் கவிழ்ந்து இருவர் காயம்
செங்கல்பட்டு:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு, திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நோக்கி, விழுப்புரம் போக்குவரத்துக் கழக அரசு பேருந்து, 43 பயணியருடன், ஜி.எஸ்.டி., சாலையில் சென்றது.செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி அருகே பேருந்து வேகமாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், பேருந்தில் இருந்த பயணியரை பத்திரமாக மீட்டனர்.காயமடைந்த பயணியர் இருவரை, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், 'கிரேன்' இயந்திரம் வாயிலாக, சாலையிலிருந்து பேருந்தை அப்புறப்படுத்தினர்.இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த விபத்து காரணமாக, ஜி.எஸ்.டி., சாலையில், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.