மேலும் செய்திகள்
செயல்படாத சிக்னல்கள் மக்கள் வரிப்பணம் வீண்
24-Nov-2025
மறைமலை நகர்: புறநகர் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில், இரும்புலியூர் -- வண்டலுார் வரை 2.30 கி.மீ., துாரம் 20.77 கோடி ரூபாயிலும், வண்டலுார் -- கூடுவாஞ்சேரி வரை 5.30 கி.மீ., துாரம் வரை, 44.48 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கூடுவாஞ்சேரி -- செட்டி புண்ணியம் மஹிந்திரா சிட்டி வரை 13.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிகளுக்காக போக்குவரத்து சந்திப்புகளில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. தற்போது பெரும்பாலான பகுதிகளில், மீண்டும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்ட நிலையில், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக பொத்தேரி அடுத்த தைலாவரம் போக்குவரத்து சந்திப்பு முதல் செட்டி புண்ணியம் வரை 13 கி.மீ., துாரத்தில் 11 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இந்த இடங்களில் ஒரு இடத்தில் கூட கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் விபத்து ஏற்படும் போது, விபத்து வாகனங்களை கண்டுபிடிப்பது, யார் மீது தவறு என தெரிந்து கொள்வது போக்குவரத்து போலீசாருக்கு சவாலாக உள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஜி.எஸ்.டி., சாலையில் விபத்து நடைபெறாத நாட்கள் இல்லை. விபத்துகளை தடுக்க போலீசார் அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் காலை, மற்றும் மாலை நேரங்களில் ஈடுபட வேண்டும். சமீப காலமாக சிங்கபெருமாள் கோவில், தைலாவரம், மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சிக்னல்கள் சில நேரங்களில் செயல்படாமல் அணைத்து வைக்கப்பட்டு உள்ளன. திருத்தேரி போக்குவரத்து சிக்னல் ஒரு நேரத்தில் இரு பக்கங்களிலும் ஒரே வண்ணத்தில் எரிவதால் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்து வருகின்றனர். எனவே, அனைத்து சிக்னல்களையும் தானியங்கி முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாத நேரங்களில், போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
24-Nov-2025