கலெக்டர் அலுவலகத்தில் வி.சி.,யினர் ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு, தத்தளூர் கிராமத்தில், பட்டியல் இனத்தவரை தாக்கியோரை கைது செய்யக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருக்கழுக்குன்றம் அடுத்த தத்தளூர் கிராமத்தில், ஏரியில் மீன் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் மீன் பிடிக்க சென்ற போது, மாற்று சமூகத்தினருடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கில் உள்ள மாற்று சமூகத்தினர் அனைவரையும் கைது செய்யக்கோரி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில், வி.சி., கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் பின், மேற்கண்ட வழக்கு தொடர்பாக, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமாரிடம் மனு அளித்தனர்.