செங்கல்பட்டு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு
மறைமலை நகர்:செங்கல்பட்டு மொத்த விலை காய்கறி சந்தை, மகேந்திரா சிட்டி அருகில், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இருந்தும் விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக, செங்கல்பட்டு சந்தைக்கு கொண்டு வருகின்றனர். புடலங்காய், சுரைக்காய், வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், மொத்த விற்பனைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றன. கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து காரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் கொண்டு வரப்பட்டு, இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த காய்கறிகளை புறநகர் பகுதி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று, தங்கள் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக, காய்கறிகள் வரத்து குறைந்ததால், அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில்,'கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக, காய்கறி சாகுபடி செய்த நிலங்களில் தண்ணீர் தேங்கியதால், காய்கறி வரத்து குறைந்தது. இதனால், காய்கறிகளின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது' என்றனர்.