பூங்கா இடம் ஆக்கிரமிப்பு மீட்க ஊரப்பாக்கத்தினர் கோரிக்கை
ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 11வது வார்டுக்கு உட்பட்ட பிரியா நகரில், பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட 34.5 சென்ட் இடத்தை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார்.அந்த இடத்தை மீட்டு நடைபாதை, சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:கடந்த 1989ம் ஆண்டில், இப்பகுதியில் பிரியா நகர் 2, மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது. இதில், சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்க, சர்வே எண் 76/4 சி1, சி2, சி3 கீழ் உள்ள 14,958 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டது.இப்பகுதி வளர்ச்சியடைய துவங்கும் போது, அந்த இடத்தை போலி ஆவணம் வாயிலாக, தனி நபர் ஒருவர் தனதாக்கி, 'பட்டா'வும் வாங்கினார். பின், பகுதிவாசிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.அதனால், அந்த இடத்திற்கு வழங்கப்பட்ட 'பட்டா' ரத்து செய்யப்பட்டது. என்றாலும், தற்போது வரை அந்த இடம் தனிநபர் வசமே உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அந்த இடத்தை முழுமையாக மீட்டு, பகுதிவாசிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, நடைபாதையுடன் கூடிய சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.