கடமலைப்புத்துார் மேம்பாலம் கீழே பள்ளங்களில் தண்ணீர் தேங்கி அவதி
அச்சிறுபாக்கம்:கடமலைப்புத்துார் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அச்சிறுபாக்கம் அருகே, சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், கடமலைப்புத்துார் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, புறவழிச்சாலையில் பிரிந்து ஒரத்தி வழியாக வந்தவாசி, காஞ்சிபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக, மேம்பாலத்தின் கீழே உள்ள சாலை கடுமையாக சேதமடைந்து, பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சாலையை பயன்படுத்துவோர், மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, பள்ளங்களில் தார் கலவை கொட்டி சமன் செய்ய, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.