கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் வகையில் ரவுண்டானா வசதியுடன் புதிய மேம்பாலம் அமைக்க, சி.எம்.டி.ஏ., நெடுஞ்சாலைத்துறை பதிலுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்பட்டது; டிச., 30ல் திறக்கப்பட்டது. இங்கு அடிப்படை வசதிகள் பிரச்னை குறித்து, பல்வேறு புகார்கள் உள்ளன. இழுபறி
குறிப்பாக, ஜி.எஸ்.டி., சாலையில் வரும் வாகனங்கள், இந்த வளாகத்துக்குள் வந்து செல்ல முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பேருந்து நிலையம் கட்டுமான பணியின்போதே இதற்கான வழிமுறைகளை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் திட்டமிட்டு செயல்படுத்தி இருக்க வேண்டும்.முறையான திட்டமிடலின்றி அவசரகதியில் பணிகளை மேற்கொண்டதே, மக்களின் அவதிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக புது மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவும் இரு துறைகளின் இழுபறியால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.போக்குவரத்து குழுமமான 'கும்டா' அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கத்திற்கு தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் வரும் வாகனங்கள் எளிதில் வந்து செல்ல மேம்பாலம் அமைப்பது அவசியமாகிறது. ஜி.எஸ்.டி., சாலையில் வண்டலுாரில் அமைக்கப்பட்ட மேம்பாலம், கிளாம்பாக்கத்துக்கு முன்கூட்டியே முடிந்து விடுகிறது.இந்த மேம்பாலத்தை, ஊரப்பாக்கம் வரை குறைந்தபட்சம், 2 கி.மீ., வரை நீட்டிக்க வேண்டும். அத்துடன் இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வெளியூர் பேருந்துகளுக்கான நுழைவாயில் அருகில் ரவுண்டானா வசதியுடன் மேம்பாலம் அமைக்க வேண்டும். பரிந்துரை
இதன் ஒரு பாகம், கிளாம்பாக்கம் வளாகத்தில் இறங்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். இதை இருவழிப் பாதையாக அமைப்பதால், பேருந்துகளின் இயக்கம்சிக்கல் இல்லாமல் செல்லும்.பேருந்து நிலைய வளாகத்தில் இதற்கு தேவையான காலி இடம் உள்ளது. அதே போன்று இங்கு, ஜி.எஸ்.டி., சாலையிலும் மேம்பாலம் அமைப்பதற்கான இட வசதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அனுமதிபெற்று, சி.எம்.டி.ஏ., தமிழக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதை மேற்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கான ஆரம்ப கட்ட வரைபடத்தில் இதற்கான வாய்ப்பு பரிந்துரைக்கப்பட்டது. நெரிசல்
ஆனால், அதன் பின் வரைபடத்தில் இந்த விபரங்கள் நீக்கப்பட்டன. தற்போது இங்கு ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வாக புது மேம்பாலம் அமைக்க அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்க, சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் பேருந்துகள், வாகனங்கள், வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு முன் அமைந்துள்ள மேம்பாலத்தில் ஏறாமல், பக்கவாட்டு சாலை வழியே செல்ல வேண்டும். இங்கு வெளிவட்ட சாலையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்களும், இந்த பக்கவாட்டு சாலையில் திருப்பி விடப்படுவதால் இங்கு நெரிசல் அதிகரிக்கிறது. இங்கு வெளிவட்ட சாலையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறிச் செல்ல வழி அமைத்தால், நெரிசலை தவிர்க்கலாம். மேலும், இந்த பக்கவாட்டு சாலையை வாகனங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்ய வேண்டும். அடுத்தபடியாக, பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள், ஊரப்பாக்கம் சிக்னல் வரை, 1 கி.மீ., தொலைவுக்கு சென்று திரும்ப வேண்டியுள்ளது. இதனால் இங்கு நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வாக, பேருந்து நிலைய நுழைவாயிலில் இருந்து, ஜி.எஸ்.டி.,சாலையில் திரும்ப மேம்பால வசதி தேவைப்படுகிறது. இதே போன்று, செங்கல்பட்டு மார்க்கத்தில் வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் சென்று திரும்ப வேண்டும். பாதிப்பு
இங்கு திரும்புவதற்கான வசதி இல்லாததால், தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள், எதிர்புறத்திலேயே மக்களை இறக்கிச் செல்கின்றன. இதையடுத்து, பயணியர் ஜி.எஸ்.டி., சாலையை கடந்து கிளாம்பாக்கம் வளாகத்துக்கு வந்து, அடுத்த பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது. செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள் உயிரியல் பூங்கா வரை சென்று, 'யு டர்ன்' எடுத்து பேருந்து நிலையத்துக்கு வர வேண்டிஉள்ளதால், இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் குறித்து, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -