செங்கை முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு லஞ்ச ஒழிப்பு வழக்குகள் மாற்றப்படுமா?
செங்கல்பட்டு:செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை, முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்குகளை மாற்றுவது கிடப்பில் போடப்பட்டு உள்ளதால், வழக்கு தொடுத்தோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில், லஞ்ச ஒழிப்பு வழக்குகள் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்குகள் சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்ததால், வழக்கு தொடுத்தோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து, புதிய குற்றவியல் நடைமுறை சட்டம், கடந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி சென்னை, திருச்சி, கோயம்புத்துார், மதுரை, சேலம், சிவங்கை, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் தவிர்த்து, 30 மாவட்டங்களில், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் லஞ்ச ஒழிப்பு வழக்கு விசாரணை ரத்து செய்யப்பட்டது. மேலும், முதன்மை மாவட்ட நீதிமன்றங்களில், லஞ்ச ஒழிப்பு வழக்குகளை நடத்தவும், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் கடந்த மே 29ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து காஞ்சிபுரம், வேலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் இருந்த லஞ்ச ஒழிப்பு வழக்குகள், முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப் பட்டன. ஆனால், செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள், முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்படவில்லை. இந்த வழக்குகளை, முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யாததால், வழக்கு தொடுத்தோர் கடுமையாக பாதிப்பட்டு உள்ளனர். எனவே, வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலன் கருதி, இந்த வழக்குகளை முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.