மறைமலைநகர் சிப்காட்டில் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?
மறைமலை நகர்:மறைமலை நகர் சிப்காட் பகுதியில், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு 20,000க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக கட்டடங்கள், 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் போதிய அளவில் கழிப்பறைகள் இல்லாததால், தொழிற்சாலைகளில் வேலை தேடி வருவோர், சரக்கு ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர், இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, மறைமலை நகர் சிப்காட் பெரியார் சாலையில், நகராட்சி சார்பில், 'துாய்மை இந்தியா 2.0' திட்டத்தின் கீழ், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், 2023ல் புதிய கழிப்பறை கட்டப்பட்டது. அனைத்து பணிகளும் நிறைவடைந்து, இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை இந்த கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் வீணாகி வருகிறது. எனவே, இந்த கழிப்பறையை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.