உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலையில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே மாமண்டூரில் செயல்படும் தனியார் குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலையில், ஆட்குறைப்பு செய்யப்பட்டதை கண்டித்து, பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாமண்டூர் பகுதியில் பிரபல தனியார் குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, மதுராந்தகம், மாமண்டூர், பழையனுார், படாளம், புக்கத்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நிரந்தர பணியாளர்கள் 100 பேர் மற்றும் தற்காலிக பணியாளர்கள், 500க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், முன்னறிவிப்பின்றி குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலை நிர்வாகம், நிரந்தர பணியாளர்களில் 90 சதவீதம் பணியாளர்களை நேற்று முன்தினம் ஆட்குறைப்பு செய்துள்ளது. இதை கண்டித்து, மீண்டும் பணி வழங்க கோரி, பணியாளர்கள் நேற்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து குளிர்பான தொழிற்சாலை பணியாளர்கள் கூறியதாவது: மாமண்டூரில் செயல்படும் வருண் பெவெரேஜ்ஸ் லிமிடெட் குளிர்பான தயாரிப்பு தொழிற்சாலையில், 35 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 90 சதவீத பணியாளர்களை நிறுவனம் ஆட்குறைப்பு செய்துள்ளது. வயது முதிர்வுக்கு முன் ஆட்குறைப்பு செய்வதால், வேறு வேலைக்கு செல்ல முடியாத சூழல் உள்ளதால், வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நிறுவனம் சார்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபடாவிட்டால், குடும்ப உறுப்பினர்களை சேர்த்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ