உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை, நடைபாதையில் பேனர்கள் ஆளுங்கட்சி கவுன்சிலர் அடாவடி

சாலை, நடைபாதையில் பேனர்கள் ஆளுங்கட்சி கவுன்சிலர் அடாவடி

சென்னை, எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா பிரதான சாலையில் நடைபாதை மற்றும் மைய தடுப்பில், கவுன்சிலரின் ஆதரவாளர்கள் வைத்த பேனர்களால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும் விளம்பர பேனர்கள் வைக்கக் கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் பிறந்த நாள், காது குத்து, திருமண விழா, கட்சி சார்ந்த கூட்டங்களுக்கு சாலை, நடைபாதை, மைய தடுப்புகளில் ஆக்கிரமித்து, பேனர்கள் அமைத்து வருகின்றனர்.அந்த வகையில், கோடம்பாக்கம் மண்டலம், 137வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தனசேகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, எம்.ஜி.ஆர்., நகர், மார்க்கெட் முதல் நெசப்பாக்கம் வரையிலான அண்ணா பிரதான சாலையில், அதிக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக நடைபாதை, மைய தடுப்புகள், சாலையை ஆக்கிரமித்து, அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், இதை கண்டும் காணாமல் உள்ளனர்.இதனால், அவ்வழியாக சென்ற பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

போலீசார் பாரபட்சம்?

சமீபத்தில் டி.பி., சத்திரம் பகுதியில் பா.ஜ., சார்பில் பொதுக்கூட்டம் நடந்த போது, பா.ஜ.,வினர் பேனர்கள் வைத்தனர். இதற்காக, டி.பி.,சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், எம்.ஜி.ஆர்., நகரில் கவுன்சிலர் தனசேகரன் வைத்த பேனர்களை, போலீசார் கண்டும் காணாமல் உள்ளனர். சென்னையில், ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியும், எதிர்க்கட்சிக்கு ஒரு மாதிரியும் சட்டத்தை போலீசார் அமல்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை