அஸ்தினாபுரம்:தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம் திருமலை நகர், வடக்கு விரிவு, பிரசாந்த் காலனி, ஏர்போர்ட் காலனி, சரஸ்வதி நகர், அம்பாள் நகர் பகுதிகளில், 8,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.செம்பாக்கம் ஏரியின் உபரி நீர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், நன்மங்கலம் ஏரிக்கு செல்லும்.இதன் போக்கு கால்வாய், ஏரியில் இருந்து துவங்கி, 1,400 அடி துாரத்திற்கு 60 அடி அகலமாகவும், மற்ற இடங்களில், 20, 10 அடி அகலமாகவும் உள்ளது.ஆக்கிரமிப்பின் காரணமாகவே, கால்வாயின் அகலம் குறைந்துள்ளது. இதனால், ஒவ்வொரு மழையின்போது, தண்ணீர் செல்ல வழியின்றி இப்பகுதி வெள்ளத்தில் பாதிக்கப்படுகிறது. 2015ல், 10 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியது.இப்பிரச்னைக்கு தீர்வு காண, திருமலை நகர் முதல் பிரதான சாலை வழியாக, செம்பாக்கம் - நன்மங்கலம் ஏரிகளை இணைக்கும் வகையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி கடந்தாண்டு துவங்கியது. மாநகராட்சி சார்பில் நடக்கும் இப்பணி இன்னும் முடியவில்லை.இந்நிலையில், பொதுப்பணித் துறை சார்பில், 3,290 அடி துாரத்திற்கு செம்பாக்கம் ஏரி முதல் நன்மங்கலம் ஏரி வரை, திருமலை நகர் முதல் பிரதான சாலை வழியாக, 26 கோடி ரூபாய் செலவில், 13 அடி அகலம், 6.5 அடி உயரத்திற்கு மூடுகால்வாய் கட்டும் பணி, நான்கு மாதங்களுக்கு முன் துவங்கியது. மூடுகால்வாய் அமையவுள்ள, 3,290 அடி துாரத்தில், 1,190 அடி துாரம் பல்லாவரம் சட்டசபை தொகுதியிலும், 2,100 அடி துாரம், தாம்பரம் சட்டசபை தொகுதியிலும் வருகிறது.முதலில், தாம்பரம் சட்டசபை தொகுதி எல்லையில் பணி துவங்கி, 90 சதவீதம் முடிந்துவிட்டது.அடுத்ததாக, பல்லாவரம் தொகுதியில் பணிகளை துவக்க முடிவு செய்யப்பட்டு, இரண்டு நாட்களுக்கு முன், பள்ளம் தோண்ட முயன்றனர். அப்பகுதியின் பணி தடுத்து நிறுத்தினர்.மூடுகால்வாய்க்காக பள்ளம் தோண்டும் போது, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய் உடைக்கப்படும்; மின் வடங்கள் அறுபடும்.பொதுமக்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால், மூடுகால்வாயை மாற்று பாதை வழியாக கட்ட வேண்டும் என, எதிர்ப்பு எழுந்தது.செம்பாக்கம் முதல் நன்மங்கலம் வரை 60 அடி அகலம் உடைய கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, சரஸ்வதி நகர் பாலம் வழியாக மூடுகால்வாயை இணைக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆய்வில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.