| ADDED : ஜூலை 18, 2024 12:31 AM
சோழவரம், சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து, ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.சோழவரம் காவல் நிலைய பகுதியிலும் ரவுடிகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி சேதுபதி, சென்னை புழல் பகுதியில் பதுங்கி இருப்பதாக, ரவுடிகள் ஒழிப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சோழவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சேதுபதி, 32, மீது, சோழவரம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், 'ஏ பிளஸ்' பிரிவு ரவுடிகள் பட்டியலிலும் உள்ளார்.கடந்தாண்டு, சோழவரம் பகுதியில் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்ட முத்துசரவணனின், எதிர்தரப்பாக செயல்பட்டு வந்தவர்.சேதுபதி பதுங்கியிருந்த இடத்தை, போலீசார் நேற்று சுற்றிவளைத்தனர். அங்கிருந்து தப்ப முயன்றவரை, போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அவரது கூட்டாளி, பிரபு, 29, என்பவரும் கைது செய்யப்பட்டு, இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.