குன்றத்துார்,ஆர்.எஸ்.எஸ்., எனும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் நடந்த, பண்பு பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சி, குன்றத்துாரை அடுத்த கோவூரில் நேற்று நடந்தது.தமிழகத்தில், ஆறு இடங்களில் நடந்த பயிற்சி முகாம்களில், 1,185 பொறுப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.கோவூர் அமிர்த வித்யாலயத்தில், ஏப்., 23ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை நடந்த முகாமில், வட தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இருந்து, 261 ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.முகாமின் நிறைவு நிகழ்ச்சி, அமிர்த வித்யாலயத்தில், நேற்று மாலை நடந்தது.இதில், முனைவர் கே.கே.சாமி எழுதிய 'பூரண சமர்ப்பணம் ஸ்ரீ பத்து ஜி' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, இ.ஐ.டி., பாரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ், தலைமை தாங்கினார். திரைப்பட தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை முன்னிலை வகித்தார்.சென்னை மாதா அமிர்தானந்தமயி மடத்தின் வினயாமிர்தானந்த புரி பங்கேற்று பேசுகையில், ''உடலுக்காகவும், உள்ளத்திற்காகவும், நாட்டு நலனுக்காகவும், 15 நாட்கள் பயிற்சி பெற்றுள்ளீர்கள். கற்றுக்கொண்டதை மனதில் பதியவைத்து, சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும்,'' என்றார்.ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக தலைவர் குமாரசாமி சிறப்புரை ஆற்றினார்.