திருவொற்றியூர்:திருவொற்றியூர் கிளை நுாலகத்தில், வாசகர் வட்டத்தின் சார்பாக, 82வது சிந்தனை சாரல் நிகழ்ச்சி, நடந்தது. இதில், புலவர் மா.கி.ரமணன் பங்கேற்று, 'அருந்தமிழ் வளர்த்த அவ்வையார்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் அவர் பேசியதாவது: எழுத்தாலும், நீதி கருத்துக்களாலும் உலகத்தையே புரட்டி போட்டவர்கள் திருவள்ளுவர், அவ்வையார். ஆரம்ப கல்வியில், அரும்புகள் மனதில் 'அறம் செய்ய விரும்பு' என்ற அவ்வையின் வரிகளை பதிய வைக்காமல் போனதே, தற்போதைய வன்முறைக்கு காரணமாகும்.இன்றைய காலத்தில், அறிவியல் தான் பிரதானமாக உள்ளது. தமிழர்களை பொறுத்தவரை, இயற்கையிலே நுண்ணறிவு திறன் உடையவர்கள். ஆனால், அறம் தான் காணாமல் போய்விட்டது.பிள்ளைகளுக்கு எதை விதைக்கிறீர்களோ, அதை தான் அறுவடை செய்ய முடியும். 50 ஆண்டுகளுக்கு முன், வீட்டில் முதியவர்கள் இருந்தனர். தற்போது, முதியோர் இல்லத்தில் உள்ளனர். பிள்ளைகளை விடுதியில் சேர்த்து படிக்க வைத்தால், அவனுக்கு பாசம், குடும்பம் தெரியாமல் போய் விடுகிறது. விளைவு, பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறான். திருவொற்றியூரில், படிக்க சொன்ன ஒரே காரணத்திற்காக, பெற்ற தாய், சகோதரனை, வாலிபர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியது. இதற்கு, பிள்ளைகள் அறத்தோடு வளர்க்கப்படாததே பிரதான காரணம். இவ்வாறு, அவர் பேசினார். இந்த விழாவில், ரமணினின் 50 ஆண்டு கால தமிழ் பணிகளை பாராட்டி, 'நற்றமிழ் நாவலர்' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.இதில், வாசகர் வட்ட நிர்வாகிகள், வரதராஜன், துரைராஜ், சுப்பிரமணி, நுாலகம் பேனிக் பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.