விமான கழிப்பறையில் சிகரட் பிடித்த திருவாரூர் பயணியால் சலசலப்பு
சென்னை:குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு 178 பயணியருடன், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று புறப்பட்டது.அதில் பயணித்த, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயது பாரூக் என்பவர், கழிப்பறையை பயன்படுத்திய போது, விமானத்தில் புகை வாடை வந்துள்ளது.இது குறித்து பயணியர், விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளித்தனர். கழிப்பறையில் இருந்து வந்த பாரூக்கிடம் விசாரித்தபோது, அவர் வாயில் இருந்து புகை நாற்றம் வந்து உள்ளது.இது குறித்து தலைமை விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார். இதையடுத்து, தயாராக இருந்த பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று மதியம் சென்னை நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஏறி, பாரூக்கின் குடியுரிமையை சோதனை செய்தனர்.பின், அவரை விசாரித்ததில், அவர் குவைத்தில் இரண்டாண்டுகள் டிரைவர் வேலை செய்து, விடுமுறையில் சொந்த ஊர் திரும்புவதாகவும், விமான விதிமுறைகள் அறியாததால், தவறுதலாக புகைத்ததாகவும் கூறினார்.மேலும், தன் மீது வழக்கு பதிந்தால், மீண்டும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உருவாகும்என அழுதார். இதையடுத்து, அவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய விமான நிலைய போலீசார், கடுமையாக எச்சரித்து, அவரை சொந்த ஊருக்கு அனுப்பினர்.
ஆறு விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் லண்டன், அந்தமான், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் வருகை, புறப்பாடு என, ஆறு விமானங்கள் நேற்று ஒரே நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.1 லண்டனில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் 3:30 மணிக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்2 சென்னையில் இருந்து அதிகாலை 5:35 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதாக, அந்நிறுவனம் அறிவித்தது. இதனால், சென்னையில் காத்திருந்த 284 பயணியர், ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டனர். 3 சென்னையில் இருந்து நேற்று காலை 7:45 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய 'ஆகாஷா ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம்4 நேற்று மதியம் 1:30 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல வேண்டிய ஆகாஷா பயணியர் விமானம்5 பெங்களூரில் இருந்து நேற்று காலை 7:05 மணிக்கு, சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம்6 மதியம் 1:00 மணிக்கு அந்தமானில் இருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.