உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் கர்ப்பிணியிடம் 18.5 சவரன் நகை திருட்டு

பஸ்சில் கர்ப்பிணியிடம் 18.5 சவரன் நகை திருட்டு

படப்பை: படப்பையில், அரசு பேருந்தில் பயணித்த கர்ப்பிணியிடம், 18.5 சவரன் தங்க நகையை, மர்ம நபர் திருடி சென்றார். தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் குமரன் நகரை சேர்ந்தவர் சரவணகுமார்; அரசு மருத்துவர். இவரது மனைவி பிரியா, 30. ஆறு மாத கர்ப்பிணி. இவர், வேலுாரில் உள்ள தனது உறவினர் திருமண விழாவில் பங்கேற்க, தன் ஒன்பது வயது மகளுடன், தாம்பரத்தில் இருந்து வேலுார் செல்லும் அரசு பேருந்து தடம் எண்: 155ல் ஏறி, நேற்று மாலை பயணித்தார். திருமண விழாவில் அணிந்து கொள்ள, 18.5 சவரன் தங்க நகைகளை பையில் எடுத்து சென்றார். தாம்பரத்தில் இருந்து படப்பை வழியே அரசு பேருந்து சென்றபோது, பேருந்தில் பயணித்த, 45 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், சில்லரை நாணயங்களை பிரியா மீது தவறவிட்டார். சாமி உண்டியலில் போட வேண்டும் எனக்கூறி, கீழே விழுந்த சில்லரை நாணயங்களை எடுத்து தருமாறு, அந்த நபர் பிரியாவிடம் கூறியுள்ளார். அதனால், சில்லரை நாணயங்களை சேகரித்து, அந்த நபரிடம் பிரியா கொடுத்தார். அதன்பின், அந்த நபர் படப்பை பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளார். ஒரகடம் பகுதியை பேருந்து கடந்தபோது, தனது பை திறந்த நிலையில் இருப்பதையும், அதில் இருந்த தங்க நகைகள் மாயமானதையும் கண்டு, பிரியா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கி வந்து, படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !