எலி மருந்து அடித்ததில் விபரீதம் குன்றத்துாரில் 2 குழந்தைகள் பலி
குன்றத்துார், நவ. 15--குன்றத்துார் அருகே, மணஞ்சேரியைச் சேர்ந்தவர் கிரிதரன், 34. குன்றத்துாரில் ஒரு தனியார் வங்கி மேலாளர். இவரதுவீட்டில், எலிகள் தொல்லை அதிகமாக இருந்துள்ளது.இதை கட்டுப்படுத்த, எலி மருந்து அடிக்கும் தனியார் நிறுவனத்தை, ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார்.இதையடுத்து, நிறுவனம் சார்பாக ஒரு ஊழியர், கிரிதரன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். வீட்டின் உட்புறம் அளவுக்கு அதிகமாக மருந்து அடித்து சென்றுள்ளார்.பின், இரவு உணவு சாப்பிட்டு, மனைவி பவித்ரா, 30, மகள் விஷாலினி, 6, மகன் சாய் சுதர்சன், 1, ஆகியோருடன், கிரிதரன் படுத்து உறங்கினார்.நேற்று காலை எழுந்ததும், அனைவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்குடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிரிதரன், தன் நண்பருக்கு மொபைல் போனில் தகவல் தெரிவித்தார்.பின், பெற்றோர், இரு குழந்தைகள் என, நான்கு பேரும் மீட்கப்பட்டு, குன்றத்துார் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, மகள் விஷாலினி, மகன் சாய் சுதர்சன் ஆகியோர், சிகிச்சை பலனின்றி இறந்தனர்.கிரிதரன், பவித்ரா ஆகியோர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.குன்றத்துார் போலீசார் விசாரித்து, தி.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தினகரன், 30, என்பவரை, கைது செய்தனர். நிறுவன உரிமையாளர் பிரேம்குமார் மற்றும் மற்றொரு ஊழியரை தேடி வருகின்றனர்.