உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குத்தம்பாக்கத்திலிருந்து வௌி மாவட்டங்கள் செல்ல 250 பஸ்கள் தயார்

குத்தம்பாக்கத்திலிருந்து வௌி மாவட்டங்கள் செல்ல 250 பஸ்கள் தயார்

சென்னை, குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு 250 பேருந்துகள் இயக்க, அரசு போக்கு வரத்து கழக சார்பில் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில், 400 கோடி ரூபாயில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டமைப்பு முடிந்து, இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இங்கிருந்து வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், திருப்பதி, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது குறித்து, அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்டமாக 250 வெளியூர் பேருந்துகளை இயக்க பட்டியல் தயாரித்துள்ளோம். தேவைப்படால், கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடில் இருந்து தற்போதும் செல்லும் பெரும்பாலான பேருந்துகள், குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழக அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம். மேலும், இங்கிருந்து கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில், 100 மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பூந்தமல்லியில் இருந்து செல்லும் 60 சதவீத பேருந்துகள், குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், தி.நகர், பிராட்வே, திருவொற்றியூர், எண்ணுார், தாம்பரம், கூடுவாஞ்சேரி, அடையாறு, அண்ணாசதுக்கம், கிண்டி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி