ரூ.2,000 லஞ்சம் வாங்கிய இருவருக்கு 3 ஆண்டு
திருவள்ளூர்,திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் முரளி, 30. இவர், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க, பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 2015ல் விண்ணப்பித்தார். அப்போது, கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த கணபதி என்பவர், இடைத்தரகராக பணிபுரிந்த பாலாஜி என்பவர் வாயிலாக, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தரமறுத்த முரளி, லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார்.லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய 2,000 ரூபாயை முரளியிடம் கொடுத்தனர். அதை பாலாஜியிடம் வழங்கினார்.பாலாஜி, கண்காணிப்பாளர் கணபதியிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர். இந்த வழக்கில், நேற்று நடந்த இறுதி விசாரணையில், திருவள்ளுர் நீதிமன்ற முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி கே.மோகன் தீர்ப்பளித்தார். இதில், லஞ்சம் வாங்கிய கண்காணிப்பாளர் கணபதி, 58, பாலாஜி ஆகிய இருவருக்கும், தலா மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.