திரும்ப வராத 30 சதவீத வெளி மாநில தொழிலாளர்கள்; திட்டமிட்டபடி மெட்ரோ பணிகளை முடிப்பதில் சிக்கல்
சென்னை: சொந்த மாநிலங்களுக்கு சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் 30 சதவீதம் பேர், வேலைக்கு திரும்பாததால், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பணிகளை திட்டமிட்டபடி, 2028 இறுதிக்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சென்னையில் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில், 118 கி.மீ., துாரத்திற்கு, 63,246 கோடி ரூபாயில், மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. அதாவது, 45 கி.மீ., மாதவரம் -- சிப்காட்; 26.1 கி.மீ., மேலும், கலங்கரை விளக்கம் -- பூந்தமல்லி பைபாஸ்; 47 கி.மீ., மாதவரம் - - சோழிங்கநல்லுார் இடையிலான பணிகளை, 70க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.பீஹார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், சட்டீஸ்கர், ஒடிசா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்து வந்து, மெட்ரோ பணியில் பிற மாநில ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபடுத்தி உள்ளன.இருப்பினும், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களில், 30 முதல் 40 சதவீதம் பேர் மீண்டும் வேலைக்கு திரும்பவில்லை. அவர்கள், தங்களின் சொந்த ஊர்களில் வேறு பணிகளுக்கு செல்கின்றனர். சென்னை மெட்ரோ பணியில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில், பலர் அருகே உள்ள மாநிலங்களில் நடக்கும் மெட்ரோ பணிகளில் இணைந்து உள்ளனர். சென்னை மெட்ரோ திட்டப் பணிகளில் பெற்ற அனுபவம், அவர்களுக்கு உள்ளூரில் பிற திட்டப்பணிகளை எளிதாக மேற்கொள்ள முடிவதாக தெரியவந்து உள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையால், சென்னையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை திட்டமிட்டப்படி, 2028க்குள் முடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மெட்ரோ ஒப்புதல்
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி தடத்தில்தான், 30 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, கூடுதல் பணியாளர்கள் நியமிப்பதோடு, தொழிலாளர்களுக்கு ஏற்ற வகையில் வேலை மாற்றங்களை செய்து வருகிறோம்.பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் தடத்தில் ஆட்கள் பற்றாக்குறை இல்லை. சுரங்கப்பாதை நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளில், 10 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த தடத்தில், ஏற்கனவே திட்டமிட்டப்படி, மெட்ரோ ரயில் பணிகளை முடித்து, அடுத்த ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம். மூன்று வழித்தடங்களிலும், 2028 டிசம்பரில் அனைத்து பணிகளையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.ஆட்கள் பற்றாக்குறையால் மட்டுமே பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்படாது. நிலம் கையகப்படுத்துவது, ஒப்பந்த பணிகள் வழங்குவதில் தாமதம் மற்றும் அடையார், திருவான்மியூர், ஆயிரம்விளக்கு உள்ளிட்ட இடங்களில், பெரிய பாறை கற்களை அகற்றுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் எழுந்தன.எனவே, சில பகுதியில் மட்டும், பணிகளை திட்டமிட்டப்படி முடிப்பதில் சிக்கல் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதியவர்களை
அழைத்து வர ஏற்பாடுதொழிலாளரை அழைத்து வரும் தனியார் நிறுவன அலுவலர்கள் கூறியதாவது: கட்டுமான நிறுவனங்களின் ஒப்பந்தாரர்கள் கூறுவதை போல், தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருகிறோம். சில ஆண்டுகளாக சென்னையில் பணியாற்றிவிட்டு, சொந்த மாநிலங்களுக்கு செல்வோரில் சிலர், மீண்டும் இங்கு வருவதில்லை. குடும்ப சூழல், உள்ளூரில் புதிய வேலை வாய்ப்பு, வேறு இடங்களில் கூடுதல் சம்பளம் போன்றவை இதற்கு காரணம். இருப்பினும், பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு நிகரமாக, புதிய தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருகிறோம். புதிய தொழிலாளர்கள் வந்து, பணியை துவங்க சிரமப்படுகின்றனர். பணிகளை கற்றுக்கொள்ள ஓரிரு மாதங்கள் ஆகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.