லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.4 லட்சம் பறிமுதல்
கூடுவாஞ்சேரி,நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, நெல்லிக்குப்பம் பிரதான சாலை அருகே, கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. பதிவாளராக வைத்தியலிங்கம் உள்ளார்.இவர் நேற்று, அலுவல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு சென்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை துணை எஸ்.பி., சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மாலை 5:00 மணிக்கு துவங்கிய சோதனை, இரவு வரை நீடித்தது. இடம் மற்றும் வீடு தொடர்பாக பதிவு செய்ய வந்தோரை சோதனை செய்தே வெளியே அனுப்பினர்.ஆய்வுக்கு பின் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சோதனையில், கணக்கில் வராத 4.26 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பொறுப்பு சார் - பதிவாளர் ஆனந்தமுத்து, 45, என்பவரிடம் விசாரித்து வருகிறோம்' என்றனர்.