உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

5.5 கிலோ கடத்தல் தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

சென்னை, இலங்கையில் இருந்து சென்னை வரும் பயணியர் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், இதற்கு விமான நிறுவன பிக்கப் வாகன டிரைவர் உதவுவதாகவும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.விமான நிலைய அதிகாரிகளின் சிறப்பு அனுமதி பெற்று, மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் ஓடுபாதையில் காத்திருந்தனர்.நேற்று அதிகாலை 4:20 மணிக்கு விமானம் தரை இறங்கியது. பிக்கப் வாகனத்தை இயக்கும் டிரைவர் ராஜ்குமார், 35, என்பவர் இரண்டு பயணியரின் சிறிய பைகளை எடுத்து பத்திரப்படுத்தினார். கண்காணித்த அதிகாரிகள், இரண்டு பைகளையும் எடுத்து சோதித்தனர். அதனுள் 5.5 கிலோ தங்கம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு 3.3 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்து, டிரைவர் ராஜ்குமாரை கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த முகமது அக்ரம், 30, முகமது வாசிம், 28, தங்கம்கடத்தி வந்தது தெரிந்தது.இவர்கள், விமான நிலையத்தில் இருந்து சோதனை முடிந்து வெளியில் வந்தபின், அவர்களிடம் கடத்தல் தங்கத்தை ராஜ்குமார் ஒப்படைக்க இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மூவரிடமும் விசாரித்ததில், சென்னையை சேர்ந்த கடத்தல் கும்பல் தலைவன் ரிபாயூதீன், 45, என்பவரின் ஏற்பாட்டில் இந்த கடத்தல் நடந்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது.இதையடுத்து, சென்னையில் ரிபாயூதீன் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி