96 கிலோ குட்கா பறிமுதல்: ஆதம்பாக்கத்தில் மூவர் கைது
ஆதம்பாக்கம்,ஆதம்பாக்கத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட, 96 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர்.ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகர் பிரதான சாலை அருகே, நேற்று முன்தினம் இரவு, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் வந்த மூவர், குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசாருதீன், 26, சென்னை, பார்டர் தோட்டத்தை சேர்ந்த அப்பு, 38, அஜித்குமார், 26, என்பது தெரியவந்தது.ஆந்திராவில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வரும் அவர்கள், ஆதம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், சில்லரை விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து, ஆட்டோ மற்றும் 96 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த ஆதம்பாக்கம் போலீசார், வழக்கு பதிந்து மூவரையும் கைது செய்தனர். 10 கிலோ கஞ்சா
பெசன்ட் நகர் பகுதியில், நேற்று வாகன சோதனை செய்த அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி, அவர்கள் கடத்திவந்த, 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், ஒடிசா மாநிலம், சுத்தாக் பகுதியை சேர்ந்த சரோஜ் பண்டுதாஸ், 49, லிப்பன் குமார்தாஸ், 30, என தெரிந்தது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.